Ads 468x150px

Labels

Monday, November 11, 2013

துபை சம்சுல் இஸ்லாம் சங்கம் குடும்ப சந்திப்பு (2013) - தொகுப்பு


கடந்த வெள்ளிக்கிழமை (08-11-2013) துபாயில் நடந்த SIS குடும்ப சந்திப்பில் கலந்துகொண்ட அனைவருக்கும்  முற்றிலும் புதிய, உற்சாகமான அனுபவம் ஏற்பட்டதாகவும், இதுபோன்ற சந்திப்புகள் மூலம் குழந்தைகள் மற்றும்  மஹல்லாவாசிகளிடையே பரஸ்பர புரிந்துணர் புதுப்பிக்கப்பட்டதாகவும் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.  குறிப்பாக வெளிநாட்டு வாழ்க்கையில் கணவர்மார்களின் பணி அழுத்தம் காரணமாக குடும்பத்தினரும் இத்தகைய  மகிழ்ச்சியான நிகழ்வுகளில் கலந்துகொள்ள வாய்ப்பு அரிதாகக் கிடைக்கும் தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும்  இந்நிகழ்வு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்ததைக் காணமுடிந்தது.

நிகழ்ச்சி ஏற்பாடு முதல் பரிசளிப்புக்குப் பிறகு ஏக்கத்துடன் கலைந்து சென்றதுவரையிலான நிகழ்வுகளை அதிரை  இணையதள வாசகர்களுக்காக தொகுத்து வழங்குகிறேன்.

1) கடந்த ஹஜ் பெருநாளன்று கோர்ஃபக்கான் கடற்கரையில் ச.இ.ச மஹல்லாவாசிகள் குடும்ப பெருநாள் சந்திப்பு  நடந்தது. போதிய முன்னேற்பாடுகளின்றி நடத்தப்பட்டதால் பெரும்பாலோருக்குக் கலந்துகொள்ளும் வாய்ப்பு  கிடைக்கவில்லை. ஆகவே, அத்தகைய சந்திப்பை மீண்டும் ஏற்படுத்துவதுதென முடிவு செய்யப்பட்டது.

2) இதற்கான திட்டமிடலை சகோ.ஏர்லிங் தமீம் அவர்களின் தலைமையில் கடந்த நவம்பர் 1 ஆம் தேதி துபாய்  மம்சார் கடற்கரையில் மஹல்லாவாசிகளின் அமர்வில் பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.

3) நவம்பர் 8,2013 வெள்ளிக்கிழமை முஷ்ரிஃப் பார்க்கில் நடக்கும் குடும்ப சந்திப்பு நிகழ்ச்சிக்கான உணவுக்கான  ஏற்பாடுகளை சகோ.அப்துல் ஹக் (ETA) மற்றும் நூர் முஹம்மது ஆகியோர் பொறுப்பேற்றனர்.

4) குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகளுக்கு சகோ.சாகுல் (தலைவர், அபுதாபி-அய்மான்) (பரிசு பேக்கிங்)  மற்றும் N.ஜமாலுதீன் (போட்டிகள் ஒருங்கிணைப்பு) பொறுப்பேற்றுக் கொண்டனர்.

5) சகோ.ஏர்லிங் தமீம் மற்றும் ஷஃபீக் ஆகியோர் அமீரகத்திலுள்ள SIS மஹல்லா குடும்பத்தினரைத் தொடர்பு  கொண்டு முன்பதிவு மற்றும் பிறஏற்பாடுகளைச் செய்வதற்கான பொறுப்பேற்றுக் கொண்டனர்.

6) காலை 9 மணிமுதல் பார்க்கில் வரத்தொடங்கிய ச.இ.ச மஹல்லாவாசிகளை தொழுவதற்கான பள்ளி மற்றும்  ஒளு செய்யுமிடம், கழிப்பறை வசதியுள்ள மரநிழலுடன் பசுமையான புள்வெளியில் ஒதுக்குப்புறமான இடத்தை  தேர்வு செய்து ஓரிடத்தில் குழுமினர்.

7) மதிய உணவாக ஆம்பூர் கறிபிரியாணி, வெங்காய ராய்தா, பாயசம் ஏற்பாடு செய்யப்பட்டு ஜும் ஆ தொழுகை  முடிந்த பிறகு பரிமாறப்பட்டது.

8) குழந்தைகளுக்கான சாக்லெட் பொறுக்குதல் (கேன்டீஸ் கலெக்சன்) போட்டியுடன் விளையாட்டுப் போட்டிகள்  உற்சாகமாகத் தொடங்கின. 3+ வயதுள்ள குழந்தைகள் இப்போட்டியில் கையில் கோப்பையுடன் போட்டிக்குத்  தயாராக இருந்தது பார்வையாளர்களை மட்டுமின்றி பார்க்கிற்கு வந்திருந்தவர்களின் கவனத்தையும் கவர்ந்தது.  இப்போட்டியில் குழந்தைகள் விரும்பி உண்ணும் சாக்லெட் மண்ணில் விழுந்து வீணாகாதபடி தரமான பேக்கிங்  செய்யப்பட்ட சாக்லெட் பயன்படுத்தப்பட்டது.மேலும் இதன்மூலம் சுத்தம் குறித்த விழிப்புணர்வும் குழந்தைகளிடம்  ஏற்பட்டதாக பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

9) அடுத்ததாக பேக்-பால் ரேஸ் (BACK BALL RACE) என்ற புதுமையான போட்டி நகைச்சுவையாகவும் பார்ப்போர்  வியக்கும்படியாகவும் இருந்தது.இப்போட்டியில் ஒரு பந்தை இருவர் முதுகில் தாங்கிப் பிடித்தபடி முன்னேறி ஓட  வேண்டும். பந்து கீழே விழுந்தால் போட்டியில் தோற்க நேரிடும்.ஒருவர் வேகமாக ஓடினாலும் பந்து கீழே விழும்.  ஆனாலும் பரஸ்பர ஒத்துழைப்புடன்,கூட்டாக பந்தை முதுகில் தாங்கியபடி ஓடியது முற்றிலும் வித்தியாசமான  பந்தயம்!

10) சாக்கு ஓட்டப்பந்தயத்திற்கான சாக்குகளைத் தேடியபோதுதான் வளைகுடாவில் அரிசி சாக்குகள் 20 கிலோ  கொள்ளளவு கொண்டவை என்பது தெரிய வந்தது. எனினும் தேடிப்பிடித்து மைதா சாக்குகளைத் திரட்டி நான்கு  கட்டங்களாகப் போட்டிகளை நடத்தி முடித்தோம்.பார்வையாளர்களாக இருந்த வெளிநாடு மற்றும் அரபியர்களுக்கு  இந்தப்போட்டி முற்றிலும் வித்தியாசமானதாக இருந்ததை அரபுகுழந்தைகளும் இப்போட்டியை கைதட்டி ரசித்தபடி  உற்சாகப் படுத்தியதிலிருந்து அறிய முடிந்தது.

11) ஆண்களுக்கான ஓட்டப்போட்டியில் 40 வயதுக்குட்பட்டவர்கள் & 40 வயதைத் தாண்டியவர்கள் என்று இரு பிரிவாக நடத்தப்பட்டது. பார்வையாளர்களிலும் சிலர் கலந்து கொண்டனர்.

12) வாயில் ஸ்பூஸ்னைப் பிடித்தபடி அதிலுள்ள எலுமிச்சை பழம் கீழேவிழாமல் ஓடும் போட்டியும் பார்க்க குதூகலமாக இருந்தது. எலுமிச்சை பழத்தை வைத்து இப்படியும் ஒரு போட்டியா? என்று பார்வையாளர்கள் ஆச்சரியமாகப் பார்த்தனர்! ;)

13) அஸர் தொழுகை முடிந்து சிறார் சிறுமிகளுக்கான பிஸ்கட் கவ்வுதல் போட்டி ஆரவாரமாகத் தொடங்கியது.  நூலில் பிஸ்கெட்டைக் கட்டித்தொங்கவிட்டு குதித்து குதித்து வாயால் கவ்வும் போட்டி,பெற்றோர்கள் மட்டுமின்றி  பார்வையாளர்களுக்கும்கூட த்ரில்லிங்கை ஏற்படுத்தியது. சாதாரண நாட்களில் பிஸ்கெட் கொடுத்தால் திண்ணாத  குழந்தைகளும், போட்டிக்காக பிஸ்கெட்டைக் கவ்வுவதற்குக் குதித்தது சுவாரஸ்யமான அனுபவம்.

14) குழந்தைகளும்,ஆண்களும் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு கலக்கியதால்,தாய்மார்களுக்கும் போட்டி  ஆர்வம் தொற்றியது.இல்லத்தரசிகளும்,இளம்பெண்களும் கலந்து கொள்ளும் வகையில் ஊசியில் நூல் கோர்ப்பது  மற்றும் கைபையிலிருந்து போனை எடுத்து அறிவிக்கப்படும் நம்பருக்கு மிஸ்டுகால் (Missed Call) கொடுப்பது  ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.

15) பல்வேறு போட்டிகள் நடந்தாலும் கலந்து கொள்ள விருப்பமின்றி இருந்தவர்களுக்காகவே கூடையில் பந்து  வீசும் போட்டி நடத்தப்பட்டது. மூன்று வயது முதல் 65+வயதுடையோரும் கலந்து கொள்ளலாம் என்பதால்  பேரர்களும்,வாப்பாமார்களும் தாத்தாக்களும் குறிதவறாமல் கூடையில் பந்து வீசுவதற்குப் போட்டி போட்டது  முழுக்க முழுக்க உற்சாகமான குடும்ப நிகழ்ச்சி என்பதை பறைசாட்டியது.

16)அனைத்து போட்டிகளுக்கும் ஒன்று-இரண்டு-மூன்று ஆகிய பரிசுகள் வழங்கப்பட்டன.முதலிரு இடங்களுக்கான  பரிசுகள் பொருட்களாகவும், மூன்றாம் பரிசாக துபாய் ஷாப்பிங் பெஸ்டிவலுக்கான குடும்ப அனுமதி (VIP PASS)   சகோ.F.இப்ராஹிம் வழங்கினார்.

17) சகோ.முஹம்மது ஹுசைன் ஆலிம் (உரிமையாளர்:திரியெம் டைப்பிங் சென்டர்) நான்கு அழகிய டின்னர் செட்  சிறப்புப் பரிசாக வழங்கினார். சகோ.ஜாஃபர் மரைக்கான் மற்றும் சிலரும் சிறப்புப் பரிசுகளை வழங்கினர்.

18) நிகழ்ழ்வில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது கலந்து கொண்ட அனைவருக்கும் வழங்கப்பட்ட குடும்ப  சீட்டில் பெயர் எழுதிபோட்டு குலுக்கி எடுப்பது.முதல் பரிசாக அரை பவுன் 24காரட் தஙகக்காசு,இரண்டாம் பரிசாக  கால் பவுன் தங்கக்காசு+டின்னர்செட் & மூன்றாம் பரிசாக கால்பவுன் தங்கக்காசு ஆகிய பரிசுகள் வழங்கப்பட்டன.  தங்கக்காசுகள் அனைத்தையும் அதிரை பெஸ்டிவல் நிறுவன உரிமையாளர் சகோ.ஏர்லிங் தமீம் வழங்கினார்.  போட்டிகளை ஒருங்கிணைத்த விளையாட்டுக் குழுவுக்கும் சிறப்பு பரிசுகள் வழஙப்பட்டன.எனக்குக் கிடைத்தது  டின்னர் செட்!

19) பரிசளிப்பு முடிந்தும் மஃரிப் தொழுகைக்குப் பிறகும் குழந்தைகள் போட்டிகளுக்குத் தயாராக இருந்ததோடு,  தாங்களாகவே மைக்கில் (என் கையிலிருக்கும் மெகாஃபோன்!) தெரிந்த குர்ஆன் ஆயத்துகளை ராகமிட்டு ஓதி  குரல்வளத்தைக் காட்டினர். இவர்களுடன் பார்வையாளர்களாக வந்திருந்த அரபுக் குழந்தைகளும் போட்டியிட்டு  கிராஅத் ஓதி சிறுசிறு பரிசுகளை வென்றனர்.

20) வெள்ளிக்கிழமை விடுமுறை தினமாக இருந்தும் சில குடும்பத்தினரின் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளில்  விளையாட்டுப் போட்டிகள் நடந்ததால் ஒருசில குடும்பத்தினர் கலந்து கொள்ள முடியவில்லை.

மொத்தத்தில் வெளிநாட்டில் வசிக்கும் அதிரையர்களின் குடும்பத்தினரில் ச.இ.ச மஹல்லாவாசிகளின் குடும்ப  சந்திப்பு அமீரகம் மட்டுமின்றி, அரபு வளைகுடா நாடுகளிலேயே புதுமையானதும் உற்சாகமானதும் என்றால்  மிகையில்லை.

தொகுப்பு: N.ஜமாலுதீன் (அதிரைக்காரன்)





No comments:

Post a Comment

இறைக் கட்டளை

இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள்.(அல்-குர்ஆன் 3: 103)